Wednesday, July 28, 2010

காமம் எனில்...


ஒரு மனிதனுக்கு காமம் எப்போது ஆரம்பிக்கிறது? அவ்வுயிர் தாயின் வயிற்றுக்குள் இருக்கும் போதே என்கிறது விஞ்ஞானம். தாயிடம் பாலருந்தும்போதே என்பது ஃபிராய்டின் கருத்து. (ஆதாரம் கேக்காதிங்கப்பு... அப்பப்ப படிச்சதுதான்! ) நம்ப லெவலுக்கு ஏன் அதுவரைக்கும் போவானேன்? குத்துமதிப்பா சொன்னா பயக வயசுக்கு வரும்போது என்பது எனக்குத் தெரிஞ்சது. புள்ளைங்களை பத்தி நான் எதுவுஞ்சொல்லலைங்க.. ஆண்டாண்டு காலமாய் அவங்களுக்கு இப்படி அப்படின்னு ஆம்பளைக நாமளே நம்ப ஆசைக.. நிராசைக எல்லாத்தையும் கலந்துகட்டி ஒரு சார்பா பேசுனது போதும். இனியாவது அதை அவங்க வாயாலேயே சொல்லவிட்டு நாம தெரிஞ்சிக்கறதுதான் யோக்கியமான முடிவுங்கறது என் எண்ணம் (இன்னும் மிஞ்சிப்போனா ஒரு 15 வருசத்துக்கு பாத்வாவும், வெளக்குமாரும் பேசுமா?! அதுக்கப்பறம்? )

பசங்க வயசுக்கு வரதா? அதெப்படிங்கறீங்களா? அதுதாங்க ஒடைஞ்ச குரலும் அரும்பு விடும் மீசையுமே காட்டிக்கொடுத்துருமே! அப்ப ஒரு 13 இல்லை 14 வயசு இருக்குமா? சரி. அந்த வயசுல காமம்னா என்னன்னு நெஜமாவே தெரியுமா? அடிக்கடி உம்மணாம்மூஞ்சியா மாற்றதும், மொகத்துல எட்டிப்பார்க்கற பருக்களும் ஹார்மோன் செய்யற வேலையாகவே இருக்கட்டும். அந்த ஹார்மோன் பசிக்கு தீனி என்னவாயிருந்ததுன்னு யோசிச்சா புள்ளைங்களை முழுங்கற மாதிரி பார்க்கறதும், அவங்க அறியாம அவங்களை ரசிக்கறதும்தான்! அதுவரைக்கும் சோட்டாளிகளா இருக்கறவுக இந்த பார்வை வந்ததுக்கப்பறம் ஒரு வித்தியாசமான என்னன்னே தெரியாத அதை தெரிஞ்சிக்கறதுதான் வாழ்க்கைல மொதவேலைங்கற அளவுக்கு அந்த ஈர்ப்பு கெளம்பி பேயாட்டம் ஆடிருது. அவங்க நடக்கறது, பேசறது, சிரிக்கறது எல்லாமே "புதுசு, கண்ணா புதுசு" தான். ஆனா அப்பவும் காமம்னா என்னன்னு தெரியும்னு சொல்லிற முடியுமா என்ன?

அப்பறம் வயசு ஆக ஆக கண்ணால் காண்பதும் மெய், காதால் கேட்பதும் மெய்யென்று படம், புத்தகம்னு மாட்டிகிட்டும், மாட்டாமலும், நம்பளையே சில நேரம் நொந்துக்கிட்டும், பல நேரம் நாமளா இப்படிங்கற அதிர்ச்சியோடவும், அரைகுறை விசயங்களையும் கற்பனைகளையும் கலந்த கூட்டாளிகளோட பண்டமாற்றமும்னு விழுந்து பொரண்டு மொகரை பேர்ந்து முட்டிசில்லு தேய அலைஞ்சு நம்ப ஜெனரல்நாலெட்ஜை வளர்த்தறதுக்குள்ள போதும்போதும்னு ஆயிருது. இப்படி கஷ்டப்பட்டு தேடிச்சேர்த்த பட்டறிவுங்கறதாலயே(நன்றி: தருமி) இது ஏதோ வாழ்க்கைல அபூர்வமா கிடைக்கக்கூடிய ஒரு பொக்கிஷமாத்தான் தோணுது! அஞ்சு வயசு வரைக்கும் சேர்ந்து இருக்கற ஒரு சகஜீவனை அதுக்கப்பறம் 20 வருசத்துக்கு ஒரு அன்னியஜீவனாகவே அடையாளம் காட்டப்பட்டு பிறகு திடீரென "இருவரும் ஒரே மனுச இனம்தான் ஆகவே ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு இல்லறத்தை நல்லறமாய்.."ன்னு பொழிப்புரை கேக்கறப்ப தள்ளியிருந்து பார்க்கற விடலைங்களுக்கு கேனத்தனமாய் உளருவதாகத்தான் படும்! வாழ்க்கையின் அடிநாதம்னா தோணும்?!

நம்ப சமூகம் இருக்கு பாருங்க! அதுவாகவும் பாலுணர்வுன்னா என்னன்னு சொல்லித்தராது! நீங்களா தெரிஞ்சிக்க முற்பட்டு முட்டில ரத்தம் வர நின்னாலும் போட்டு தாளிச்சிரும்! அதுக்காக மனுசப்பயக சும்மாவா இருக்கறோம்? இல்லை சமூகத்தை விட்டு ஓடிற முடியுமா? ஒலகத்துல எந்த மூலைக்கு போனாலும் பெத்தவுக, கூடப்பொறந்ததுக, பங்காளிகளை ஒதுக்கிவைச்சிட்டு வாழ்ந்துற முடியுமா? வேரோடு புலம் பெயரும் சிறுசுகளுக்குக்கூட இது சிரமமான காரியம்னாலும் ஒட்டுமாங்கனி மாதிரி ஒட்டிக்கிச்சுன்னா கவலையே இல்லை. ஒட்டாம போகவும் வாய்ப்பு ரொம்ப கம்மி. பச்சை களிமண்னுக இல்லையா! ஆனா ஒரு சமூகத்தோட ஒட்டி வளர்ந்துட்ட நம்பள மாதிரி வளர்ந்த மரங்கள வேரோட வேற எடத்துல நட்டா வளர்றதுக்கு வாய்ப்பு ரொம்ப கம்மி. சுட்ட பானைக மாதிரிதான். வளைச்சா ஒடைஞ்சிருமே தவிர வளையுமா என்ன? போற எடத்துல எல்லாம் தமிழ் சங்கங்களும், மன்றங்களும், இந்த வலைப்பதிவுகளும் எல்லாம் ஏதோ ஒரு விதத்துல நம்ப சமூகத்தோட ஒட்டிக்கிறதுக்கான அடையாளங்களே அன்றி வேறென்ன?

நமக்குப்பிடிக்காத கருத்துக்களையும் வறட்டுபிடிவாதங்களையும் வைத்திருந்தாலும்கூட இந்த சமூகத்தை எட்டி ஒதைச்சிட்டு ஓடிற முடியுமா சொல்லுங்க? இங்கனயே இருந்து மாற்றங்களுக்காக குரல் கொடுக்கறதும் கொடுக்கற குரலுக்கு வலிவு இருந்துச்சுன்னா அதுக்கேற்ப வளைஞ்சுகொடுக்கறதும்தான் நம்ப.. நம்ப என்ன.. எந்த சமூகத்துக்கும் வரலாறு. இங்கன இருக்கறவுகளையெல்லாம் கேனப்பயகன்னு சொல்லிட்டு ஃபிரெஞ்சு, லத்தீன் இலக்கியம் வாழ்க்கைதான் ஒலகத்துல பெருசு.. இது உங்க தயிர்சாத வாழ்க்கைக்கு எங்க புரியப்போகுதுன்னு கூவிக்கிட்டி இருந்தாலும் திங்கறதும், கால் கழுவறதும் இங்கதானே? எழுதறதும் அதே நம்ப முட்டாப்பயகளுக்குத்தானே? சொல்ல வந்தது சமூகத்தை திட்டிக்கிட்டு இருந்தாலும் விட்டுட்டு ஓடிறமுடியாதுங்கறது தான்!

அறுத்தெரியமுடியாத பிணைப்புகள் உள்ள இந்த சமூகத்துல இருந்துக்கிட்டு என்ன தப்பு செஞ்சாலும் அது காலப்போக்குல நீர்த்துத்தான் போகுது. காமத்தில் தவறுதல் தவிர! 1000 கோடி சுருட்டுன ஹர்சத்மேத்தாவையும் நாலுபேரு பொருளாதார மேதைன்னுதான் சொல்லறாங்க. கோடி கோடியா சுருட்டி படங்களோட சேதி வந்தாலும் அடுத்த தேர்தல்ல ஜெயிக்கத்தான் செய்யறாங்க! அட இவ்வளவு ஏங்க? அடுத்த நாடுமேல குண்டு போட்டு அழிச்சாலுமே அவங்களை பத்தி பேப்பரும் மக்களும் பேசிப்பேசி மாஞ்சுட்டு அடுத்தவேலைய பார்க்கப்போயிறது இல்லையா? ஆனா பாருங்க. முறையற்ற காமம்கற எடத்துல ஒருத்தன் இடறி விழுந்துட்டான்னா ஊரே அவனைப்போட்டு மிதிச்சிக்கொண்டாடிறுது. அது கிளிண்டனா இருந்தாலுஞ்சரி.. சரவணபவன் அண்ணாச்சியா இருந்தாலுஞ்சரி... என்னவோ ஒலகத்துல அத்தனை மக்களும் ஒழுக்கம் மாதிரி! பார்க்கப்போனா ஒவ்வொரு மனுசமனமும் ஒரு ரகசியகிடங்கு! அதுக்குள்ள இருக்கற அழுக்குகளும் தவறுகளும் பிறழ்வுகளும் சமூகக்கட்டுப்பாடுங்கற ஒரு உறையைப்போட்டு மூடி மறைக்கப்பட்டிருக்கு. அதை மீறி விகாரங்களை வெளிக்கட்டறவங்க காமுகன்னு பெயர் வாங்கிடுறான். உறையை இறுக்கிக்கட்டிக்கிட்டு உலாத்தறாவங்க எல்லாம் நல்லவங்கன்னு பேரு வாங்கிடுறோம்! அது விருப்பப்பட்டு இறுக்கிக்கட்டுனாலும் சரி. கட்டாயத்துல கட்டுனாலும் சரி!

பாருங்க... ஆரம்பிச்சதுல இருந்து கருத்து கந்தசாமி மாதிரியே பேசிக்கிட்டு இருக்கேன்! 'அவன்' என் கல்லூரி கூட்டாளிங்க. படிக்கற விசயத்துல அவன் புலிங்கறதால அந்த விசயத்துல மட்டும் அவங்கூட சேர்றதில்லை. அவனும் என்னை சேர்த்துக்கிட்டது இல்லை. (பின்ன?! என் ஸ்பீடுக்கு அவனால ஈடுகொடுக்கமுடியுமா என்ன?! ) மத்தபடி ஆட்டம், பாட்டம்னா சோடி போட்டுக்கிட்டு அலம்பரதுதான். அவனுக்கு இல்லாத திறமையே இல்லைங்க. காலேஜ் டீம்ல ஓபனிங் பேட்ஸ்மேன்! கல்சுரல்ஸ்ல ஃபேஷன்பெரேட் மாடல். பார்க்க கொஞ்சம் பழம் மாதிரி இருக்கறதால எப்பவும் அவனுக்கு ஸ்டேஜ்ல குர்தாதான்! பய படிப்புல சொல்லவே வேணாம். அவனோட அப்பா ஊருல பெரிய டாக்டர். பரம்பரையா பாரம்பரியம் மிக்க பெரிய குடும்பம். அவன் வீட்டுக்கு நாங்க போறதே தீனி திங்கதான். அவங்கமா அப்படி அருமையா சமைப்பாங்க! வீடு முழுக்க அவங்க கைவண்ணத்துல செஞ்ச கலைப்பொருள்களா இருக்கும்! அம்சமா பாடுவாங்க. வீணை வாசிப்பாங்க. ஒரு நிமிசம் சும்மா இருக்க மாட்டாங்க. அவங்களை பார்த்தாலே எனக்கெல்லாம் ஒரு குற்றஉணர்ச்சி மனசுல வந்துரும். இந்த இளவயசுல இப்படி தத்தியா திரியறமேன்னு! அவனை எனக்கு ஒரு ரோல்மாடல்னு சொல்லமாட்டேன். ஆனா அவனோட வளர்ச்சிய பார்க்கப்பார்க்க மலைப்பா இருக்கும். நான் டிகிரி வாங்கிட்டு அடுத்து என்ன செய்யலாம்னு ஆழ்ந்த சிந்தனைல இருந்தப்ப அவன் விசா வாங்கிட்டு அமெரிக்காவுக்கு படிக்க போயிட்டான்! நான் ஒரு வேலை கிடைச்சு அதுல சேரும் போது அவன் புகழ்பெற்ற ஒரு கம்பெனில விஞ்ஞானியா சேர்ந்திருந்தான்! நான் டவுன்பேமெண்ட் கட்டி லோன் போட்டு வாழ்க்கைல என் முதல் இலக்கான யமாஹா 135 வாங்கும்போது அவன் BMW 5series முன்னால நின்னு சிரிச்சுக்கிட்டு இருக்கற போட்டோ அனுப்பியிருந்தான். நான் நல்ல வேலைல செட்டிலானதுக்கப்பறம்தான் கல்யாணம்னு ஒரு முடிவுல இருந்தப்ப அவன் கூடப்படித்த ஒருத்தியையே காதலித்து கல்யாணம் பண்ணியிருந்தான்! எனக்கு கல்யாணம் ஆனபோது அவன் 2 வயது பெண்குழந்தைக்கு அப்பனாகி 4 பெட்ரூம் கொண்ட பெரிய வீட்டுக்கு சொந்தக்காரனாகியிருந்தான். அப்பவே அவன் பேரை யாஹூல போட்டு தேடுனா அஞ்சாரு சுட்டிகள் வரும். அவன் கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை தகவல்களை உள்ளடக்கி. எனக்கு இந்த ஒரு விசயத்துலதான் ஆசையா இருக்கும். நம்ப பேரும் என்னைக்கு இணையதளத்துல வரும்னு? ( ப்ளாகர் புண்ணியத்துல இப்ப வரவைச்சுட்டேன்னு வைங்க.. :) ) ஊருல அவன பெத்தவங்களை பார்க்கும்போதே அவ்வளவு சந்தோசமா இருக்கும்!

இப்போ அவன் அமெரிக்காவுல ஜெயில்ல இருக்காங்க! செஞ்ச தப்பு இதுதான்... வலைல ச்சேட் (Chat ) பண்ணும்போது ஒருத்திகூட பேசியிருக்கறான். அவளுக்கு வயசு 13ம்னு சொல்லியிருக்கறா. பேசப்பேச பேச்சு வேறவகையில போயிருச்சி. இவன் பேச்சுல செக்ஸ் Interest காட்ட மறுமுனையிலிருந்தும் சிக்னல் வந்திருக்கு. எங்க சந்திக்கலாம்னு முடிவுசெஞ்சு ஒரு இடத்துக்கு அவ வரச்சொல்ல இவன் அங்க குறிப்பிட்ட இடத்துக்கு அதே நேரத்துக்கு தேடிப்போக வசமா மாட்டிக்கிட்டான். அதுவரை chatல பேசுனது 13 வயசு பெண்ணே இல்லை! காவல்துறை அதிகாரி! இந்த மாதிரி சிறார்களுடன் பாலியல் தொடர்பு வைக்கறவங்களை பொறிவைத்து பிடிக்கறதுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு காவல்துறை அமைப்பு. எல்லாம் ஒரே வாரத்தில நடந்து முடிஞ்சிருச்சு! வழக்கும் நடந்தது. கோர்ட்டுல கொடுக்கப்பட்ட ஆதாரங்கள் இவன் chat செய்த அனைத்தும் மற்றும் 2 மணிநேரம் இந்த சந்திப்பிற்காக கார் ஓட்டிக்கொண்டு 80 மைல் தூரத்தில் இருக்கும் அந்த இடத்திற்கு சென்றதும்! அவன் இருக்கும் மாகானத்தில் சிறார்களுடன் பாலியல்தொடர்புக்கான Intention இருந்தாலே போதுமாம். தண்டனையளிக்க! 5 வருடங்கள் சிறைதண்டனை தீர்ப்பானது. இவனைபோலவே அதே வாரத்தில் சிக்கிய இன்னொருவனுக்கு 25 வருடங்கள் தண்டனை. இரண்டாவது முறையாக மாட்டுகிறானாம். இவனது வழக்கு நடந்த 1 வருடத்தையும் சேர்த்து இதுவரை 3 வருடங்கள் ஓடிவிட்டது. அவன் மனைவி 6 மாதத்தில் பெண்குழந்தை இருக்கும் காரணம் காட்டி விவாகரத்து பெற்றுக்கொண்டு பெயரையும் மாற்றிக்கொண்டு வேறு மாகானத்துக்கு சென்றுவிட்டாள். நண்பர்கள் அவனுடன் பேச முயன்றும் அவன் யாருடனும் பேச மறுத்துவிட்டான்!

நீங்கள் இதற்கு 'Pedophilia" என மருத்துவபெயர் கொண்டு இதற்கான காரணங்களை ஆராய முற்படுங்கள். அல்லது இவன் போன்றவர்களை கழுவிலேற்ற வேண்டும் என தீர்ப்பெழுதுங்கள். அல்லது யோனியின் வழியே ராக்கெட் விடும் கதைகளை எழுதும் பின்நவீனத்துவ காலத்தில் இது ஒரு பிற்போக்கான தயிர்சாதவகை எழுத்தென இலக்கியநோக்கில் பாருங்கள். அல்லது உள்மனவிகாரங்களை உளவியல் ரீதியாக பிரித்தாராயுங்கள். எனக்குத்தெரிவதெல்லாம் அவன் செய்த இந்த காரியத்தினால் அவனைச்சார்ந்திருப்போருக்கு ஏற்பட்ட பாதிப்புதான். அவனது தந்தை மருத்துவவேவையை நிறுத்தி சில வருடங்களாயிற்று. அவனது அம்மாவிற்கு இப்போது கோவிலே கதி! எப்பொழுதும் உற்சாகம் கொப்பளிக்கும் அவனது வீடு இன்னும் இயல்பு நிலைக்கு மீண்டபாடில்லை! எங்கோ ஒரு நாட்டில் சிறையில் இருக்கும் மகனைப்பற்றிய அந்த அம்மாவின் மனநிலை என்னவாக இருக்கும்? அதுவும் வெளியில் சொல்லமுடியாத ஒரு குற்றப்பிண்ணனியை கொண்டு?! இப்பொழுது 5 வயதில் ஒரு பெண்குழந்தையை வைத்திருக்கும் அவன் முன்னால் மணைவி இதனை எவ்வாறு எதிர்கொண்டு சாமளித்து மீண்டுவந்திருப்பாள்? இல்லை அவன் தான் என்ன மனநிலையில் 5 வருடங்களை கழிக்கப்போகிறான். விடுதலையானபின்னும் அமெரிக்காவில் அவன் எப்படி வாழப்போகிறான்? ஒரு வாடகை வீடு எடுக்கும்போதுகூட அதற்குமுன் அவனது History அவன் இருக்கும் பகுதியும் காவல்நிலையத்திற்கு அனுப்பப்பட்டு அவன் இருப்பை பற்றிய தகவலகள் அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தப்படும் நிலையில்!

இந்த உலகம் காதல், கடன், பகை, துரோகம் என அனைத்து தோல்விகளுக்கும் அவமானங்களுக்கும் காலம் என்ற மருந்தை வைத்திருக்கிறது. ஆனால் முறையற்ற காமம் என்ற குற்றத்தினை மட்டும் அது அவ்வளவு எளிதில் மன்னிப்பதே இல்லை. வாழ்க்கை முழுதும் வாழ்க்கைக்கு பின்னும் நிலைத்துதான் விடுகிறது. இப்பொழுதும் அவனது பெயரை கூகுளில் இட்டு தேடினால் 97 சுட்டிகள் கிடைக்கின்றன. அவன் கண்டுபிடிப்பிகளுக்கான காப்புரிமை சுட்டிகள் 6 போக மற்றவை அவன் கைது மற்றும் வழக்கு பற்றிய செய்திகளுடன்!

No comments:

Post a Comment